ஓடும் ரெயிலில் தன்னை ஒருவர் சில்மிஷம் செய்ததாக, நடிகை சொர்ணமால்யா எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரவீந்திரன் (வயது 33), வக்கீல் சங்கத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நடிகை சொர்ணமால்யா கடந்த 3-ந் தேதி எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 354 (மானபங்கம் ஏற்படுத்த உட்கருத்துடன் செயல்படுதல்), பெண் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்துநகர் எக்ஸ்பிரசில் கடந்த 3-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து எழும்பூருக்கு சொர்ணமால்யா சீட் நம்பர் 31-ல் லோயர் பெர்த்தில் வந்ததாகவும், இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஒருவர் தன்னை தொட்டதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
காலை 6.45 மணிக்கு தனது படுக்கைக்கு எதிரே உள்ள லோயர் பெர்த்தில் இன்னொருவர் இருந்ததாகவும், மீண்டும் தூங்க முயற்சித்தபோது தன்னை அந்த நபர் தொட்டு சில்மிஷம் செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். தனது உதவியாளர் மூலம் டிக்கெட் பரிசோதகரை அழைத்ததாகவும், ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்றும், இந்த சூழ்நிலையில் சிவப்பு சட்டை போட்ட, `ஷூ' அணிந்த லக்கேஜ் இல்லாத நபர் ஒருவர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாருக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஒரு வயதான அம்மாவுக்கு `அப்பர்பெர்த்' வழங்கப்பட்டிருந்தது. அவர் தனக்கு `லோயர் பெர்த்' வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அந்த `லோயர் பெர்த்'தை அவருக்கு கொடுத்துவிட்டு, நான் அவருக்கு ஒதுக்கப்பட்ட `அப்பர்பெர்த்தில்' ஏறி படுத்து தூங்கினேன். நள்ளிரவில் நடந்த விவரம் எனக்கு தெரியாது. நான் ரெயிலில் இருந்து குதிக்கவும் இல்லை.
யாரோ ஒருவர் தப்பாக நடந்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம். அப்பர் பெர்த்தில் படுத்திருந்த ஒருவர், லோயர் பெர்த்தில் படுத்து தூங்கும் ஒருவரை தொட முடியாது. நான் பி.பி.ஏ. படித்துள்ளேன். தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக உள்ளேன். எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளேன். ஆகவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.