தமிழக தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்று நரேஷ் குப்தா கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். அவர் சனிக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:
உள்துறை, மாநில திட்ட கமிஷன், பொதுத் துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பொறுப்பேற்றதும் அதிகமான பணிச்சுமை இருக்காது என நினைத்தேன். ஆனால், தமிழகத்தில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இதனிடையே, இடைத் தேர்தல்களும் அதிகமாக நடந்தன. சவாலான தேர்தல் பணியாக நாடாளுமன்றத் தேர்தல் இருந்தது.
சட்ட மேலவை அமைக்கும் பணிகள் இப்போது அதிகமாக உள்ளன. தேர்தலில் பணபலம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இதைக் கட்டுப்படுத்துவது சிரமமான விஷயம். இதுகுறித்து, புதிதாக வரும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு சிறிது ஓய்வு தேவை. புத்தகம் எழுதுவது பற்றி பிறகு யோசிப்பேன். அரசியலில் ஈடுபட எனக்கு ஆர்வமில்லை.