நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
Monday , 5th July 2010 09:49:00 AM
ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 24 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ஒரு சோதனை செய்து பார்த்துள்ளனர். அதன்படி, மாணவர்களுக்கு, கணினியில், வார்த்தை விளையாட்டுகள் கொடுக்கப்பட்டன.ஒரு மாணவர் குழு, மாலையில் அதற்காகத் தயார் செய்து கொண்டு, மறுநாள் காலையில் வார்த்தை விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டனர். மற்றொரு மாணவர் குழு, காலையில் தயார் செய்து, மாலையில் போட்டியில் கலந்து கொண்டனர்.
இரண்டில் முதல் குழு மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்றனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
மனிதனின் மூளையில் பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவற்றுக்கிடையில் பலவீனமான ஒருங்கிணைப்பு இருக்கும் பட்சத்தில் அது தூக்கத்தில் பலப்படுத்தப்படுகிறது. மூளையிலுள்ள, "ஹிப்போ கேம்பஸ்" என்ற பகுதி, நீண்ட காலத்துக்கு நினைவுகளை சேமிக்கும் பகுதி. தூக்கத்தின் போது, அன்றைய நினைவுகளை உள்வாங்கி நீண்ட காலப் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது.அதனால், சிறு தூக்கம் அல்லது ஆழ்ந்த உறக்கம், ஹிப்போ கேம்பஸ் வேலை செய்ய உறுதுணை செய்யும். அதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.