|
சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவு Tuesday , 27th July 2010 05:59:49 AM

பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று 111 புள்ளிகள் சரிந்தன. ஆட்டோமொபைல் நிறுவன பங்கு விலைகள் பெருமளவு சரிந்ததே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும் குறியீட்டெண் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு அதிகமாக அதாவது 18,020 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் 30 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 5,414 புள்ளிகளாக சரிந்தது.
மாருதி சுஸுகி மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் திருப்திகரமாக இல்லாதது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ரூபாயின் மாற்று மதிப்பு குறித்து தரச்சான்று நிறுவனம் வெளியிட்ட தகவலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்தது.
மேலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) ரிசர்வ் வங்கி தனது காலாண்டு நிதிக் கொள்கையை வெளியிட உள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று பரவலாக செய்தி வெளியானதும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
மாருதி சுஸுகி நிறுவனப் பங்கு விலை 12.31 சதவீதமும், ஹீரோ ஹோண்டா நிறுவனப் பங்கு 7.46 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை 5.75 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 3.44 சதவீதமும், டிஎல்எப் பங்குகள் 2.89 சதவீதமும் சரிந்தன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் ரூ. 583 கோடியிலிருந்து ரூ. 465 கோடியாக சரிந்தது. இதனால் இந்நிறுவனப் பங்கு விலை 12 சதவீதம் சரிந்து ரூ. 1,191.05-க்கு விற்பனையானது.
ஹோண்டா நிறுவனம் தன் வசம் உள்ள பங்குகளை ஹீரோ நிறுவனத்துக்கு விற்றதாக தகவல் வெளியானதால் ஹீரோ ஹோண்டா பங்குகள் சரிவைச் சந்தித்தன.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 2.24 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 1.16 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 515 கோடி லாபம் ஈட்டியது. இருப்பினும் இந்நிறுவனப் பங்கு விலை 5.75 சதவீதம் சரிந்தது. கட்டுமான பிரிவின் லாபம் கணிசமாக குறைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக லாபம் ஈட்டியது என்று நிறுவனத் தலைவர் ஆனந்த் ரதி குறிப்பிட்டார். ஆனாலும் முதலீட்டாளர்களை இந்நிறுவன பங்கு ஈர்க்கத் தவறியது.
பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலைகள் கணிசமான உயர்வைச் சந்தித்தன.
இந்நிறுவனப் பங்கு விலை 2.1 சதவீதம் உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்நிறுவனப் பங்கு விலை 4 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜாம்பியாவில் உள்ள ûஸன் டெலிகாம் நிறுவனத்தின் பங்குகளை இந்நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பார்தி ஏர்டெல் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்து வருகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் டிசிஎஸ் பங்குகள் 0.96 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்குகள் 0.74 சதவீதமும், விப்ரோ பங்குகள் 0.24 சதவீதமும், ஐடிசி பங்குகள் 0.53 சதவீதமும் உயர்ந்தன.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 16 நிறுவனப் பங்குகள் சரிந்தன. 13 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. ஒரு நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஒட்டுமொத்தமாக 1824 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1090 நிறுவனப் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. |
|